06.12.2008 - 05.12.2009
குரு பகவான் தற்போது உள்ள தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சி நவமபவர் 28 ம் தேதி (வெள்ளிக்கிழமை) நிகழும் என்றும் டிசம்பர் 6ம் தேதி (சனிக்கிழமை) நிகழும் என்றும் இருவித கணக்குகள் தெரிவித்தாலும் அவர் பெயர்வதற்கு முன்னாலேயே அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க ஆரம்பித்துவிடும். குரு தனது பலவீனமான இடமாகிய நீச ஸ்தானத்துக்கு செல்கிறார். எனினும் இவர் தனது பார்வையால் நமக்கெல்லாம் நன்மை செய்யவிருக்கிறார். அவர் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்களை அளிக்கவிருக்கிறார் பார்ப்போமா:
மேஷம்
குரு உங்கள் ராசிக்குப் பத்தாம் வீடாகிய மகரத்திற்கு வருகிறார். அங்கிருந்து உங்கள் ராசிக்கு 2 ஆம் வீட்டையும் நான்காம் வீட்டையும் மற்றும் ஆறாம் வீட்டையும் பார்க்கிறார். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டை குரு பார்க்கிறார். நான்காம் வீடு என்பது தாயார், கல்வி, மற்றும் வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயாரின் உடல் நிலையில் இது வரை இருந்து வந்த குறைகள் தீரும். அவை குணமாகும்.நான்காம் வீடு கல்விக்குரிய வீடு என்பதால் மாணவர்களுக்கு படித்ததெல்லாம் நன்றாக மனதில் படிந்து தேர்வுகளை சிரமம் இன்றி எழுதி அருமையான மதிப்பெண் வாங்குவீர்கள்.நான்காம் வீடு வாகனத்துக்குரிய வீடு என்பதால் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை விற்பதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கவும் சாத்தியம் உள்ளது.ஆறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் தீரும். எதிரிகள் நண்பர்களாவார்கள். நல்ல நண்பர்கள் புதிதாக சேருவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன்கள் முழுவதுமாகத் தீரும். மாணவர்கள் நிறைய முயற்சி எடுத்து கவனத்துடன் படித்தால்தான் வெற்றியை எதிர்பார்க்கலாம்.அலுவலகத்தில் நீங்கள் விரும்பாத சில மாற்றங்கள் ஏற்படலாம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டுக்கு குரு பகவான் வருகிறார். இது மிகவும் சிறப்பான அமைப்பாகும். ஒன்பதாம் வீட்டில் இருக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியையும் ராசிக்கு மூன்றாம் வீட்டையும் ஐந்தாம் வீட்டையும் பார்க்கிறார்.ஒன்பதாம் வீடு என்பது சௌபாக்ய ஸ்தானம். வாழ்க்கை வசதிகள் பெருகும். நிம்மதியும் மகிழ்ச்சியும் மனதில் நிலவுவதுடன் பணமும் நிறையப் புரண்டு மனதிலும் பாவ சிந்தனைகள் இல்லாமல் இருக்கப்போகிறீர்கள். குரு இவ்வளவு காலம் உங்கள் மனதில் தோன்றிக் கொண்டிருந்த அநாவசிய கோபம் ஆத்திரம் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துவார்.
ராசியைப் பார்ப்பதால் குரு உங்கள் எண்ணங்களில் உயர்வுகளைக் கொடுப்பார். தீய எண்ணங்கள் வராது. தங்க நகைகள் வாங்கி சேர்த்துக் கொள்வீர்கள். கணவருக்கும் (அல்லது மனைவிக்கும்) உங்களுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவ ஆரம்பிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும். மற்றவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கக்காத்திருப்பார்கள். புண்ணிய காரியங்களுக்கும் வயதானவர்களுக்கு சேவை செய்வதற்கும் கோயில் குளம் என்று போகவும் மகிழ்ச்சியுடன் கிளம்பிவிடுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம். நீங்கள் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகள் நிறைவேறும். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் இவ்வளவு காலம் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். குழந்தை இருந்தால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்களுக்கு அற்புதமான நன்மைகள் ஏற்படும். நிறைய மதிப்பெண் கிடைக்கும்.
மிதுனம்
இந்த குரு பெயர்ச்சியால் குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடாகிய மகரத்துக்கு வருகிறார். அவர் உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீடாகிய ரிஷபத்தையும் இரண்டாம் வீடாகிய கடகத்தையும் நான்காம் வீடாகிய கன்னியையும் பார்க்கிறார். இவ்வளவு காலமாக நிலவி வந்த பண நெருக்கடி தீரும். எட்டாம் வீடாகிய ஆரோக்ய ஸ்தானத்துக்கு குரு வந்திருப்பதால் உங்களை இவ்வளவு காலமாக பயமுறுத்தி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நோய் நொடிகள் பறந்தோடும்.12ம் வீடாகிய விரயத்தை குரு பார்ப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். பார்ப்பவர் குரு என்பதால் சுப செலவுகளாகத்தான் இருக்கும். வீட்டில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற நல்ல விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சிகரமான செலவுகளாகவே இருக்கும்.அதோடு உங்களுடைய 2 ஆம் வீட்டையும் குரு பார்க்கிறார்! குருபார்க்க கோடி பாவம் விலகும். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். அதாவது செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை அதிகரித்து கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்டலாபங்கள் நிச்சயம் உண்டு. திருமணம் குழந்தைப்பேறு போன்ற காரணத்தினால் குடும்பம் பெருக வாய்ப்பு உள்ளது. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டை அதாவது கன்னியை குரு பார்ப்பதால் என்ன நன்மைகள் நமக்குக் காத்திருக்கின்றன? நான்காம் வீடு என்பது தாயார், கல்வி, மற்றும் வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயாரின் உடல் நிலையில் இது வரை இருந்து வந்த குறைகள் தீரும். நான்காம் வீடு கல்விக்குரிய வீடு என்பதால் மாணவர்களுக்கு இது அருமையான முன்னேற்றங்களைக் கொடுக்கும். படித்ததெல்லாம் நன்றாக மனதில் படிந்து தேர்வுகளை சிரமம் இன்றி எழுதி பிரமாதமான மதிப்பெண் வாங்குவீர்கள் அதாவது படிப்பில் நாட்டமும் அதன் காரணமாக வெற்றிகளும் கூடும். நான்காம் வீடு வாகனத்துக்குரிய வீடு என்பதால் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனங்களை விற்பதன் மூலம் லாபம் வரும்.அலுவலகவாசிகள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. படிப்பு மற்றும் உத்யோகம் சம்பந்தமாக வெளிநாடு போக வாய்ப்பு வரும். உங்கள் மகன் அல்லது மகளால் சிறு பிரச்சனைகள் வந்தால் பொருட்படுத்த வேண்டாம். பொருட்படுத்தும் அளவுக்கு அது பெரிய விஷயம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடகம்
இவ்வளவு காலம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அதாவது உங்களின் மறைவிடத்தில் அமர்ந்து உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருந்து வந்த குரு பகவான் ஜம்மென்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீடாகிய மகர ராசிக்கு வருவது உங்களுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கப்போகும் அமைப்பு. ஏற்கனவே ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடப் போகும் நிம்மதியில் வெற்றிநடைபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இது அதிருஷ்டத்துக்குமேல் இரட்டிப்பு அதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஏழாம் வீட்டிற்கு வரும் குரு பகவான்அங்கிருந்து உங்களுடைய பதினோறாம் வீட்டையும் உங்கள் கடக ராசியையும் மற்றும் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டையும் பார்க்கிறார். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் பிரச்சினைகள் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். பதினோறாம் வீடு என்பது லாபஸ்தானமாகும். உங்கள் முயற்சிகள் நன்மையையும் லாபத்தையும் கொடுக்கும். சிறிய முயற்சிகளுக்குப் பெரிய பலன்கள் இருக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் நேர்மையாகத் திருப்பிக் கொடுப்பார்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவர்களின் கடன்களை சுலபமான அடைக்கும் அளவுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் நடக்கவிருக்கும் எந்த சுப காரியத்த்துக்கும் தடையின்றிப் பணம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் வியாபாரியாக இருந்தால் தொழிலில் போட்டிகளையும் பொறாமைகளையும் சந்தித்து நொந்து போயிருந்த நீங்கள் இனி தொழிலை நிலை நிறுத்திப் பொருள் குவிக்கலாம்.நண்பர்களாலேயே நண்பர்கள் போல் நடிக்கும் எதிரிகளாலேயோ பிரச்சினை வரக்கூடும். குடும்பத்தினரிடம் கடுமை காட்டி நடந்து கொள்வதால் பிரச்சினைகள் வரக்கூடும். வெளிநாடு போக வாய்ப்பு வரக்கூடும். அரசாங்கத்திடமிருந்து பல காலம் எதிர்பார்த்து வந்த நன்மைகள் கையில்வந்து விழும். புதிய தொழிலில் இறங்கினால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். எந்தக் காரணத்துக்காகவும் யாரிடமும் வாக்குவாதம், விவாதம் மற்றும் சண்டை போன்ற விஷயங்கள் வேண்டவே வேண்டாம். பணிந்து போங்கள். குறைந்து போய்விட மாட்டீர்கள். எதையும் அவசரப்பட்டு செய்யாமல் நிறுத்தி நிதானமாய் யோசனை செய்த பிறகே இறங்குங்கள்.உங்கள் சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். தாயாருக்காக நீங்கள் சிறு தியாகங்கள் செய்ய வேண்டும். இளைஞர்கள் மிகவும் பக்குவமாக யோசிக்க ஆரம்பிப்பீர்கள். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் வந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படும்மாணவர்கள் நல்ல பெயர் எடுப்பதுடன் படிப்பில் நிறைய வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு சொத்துக்கள் வரும். நகைகள் சேரும்.குடும்பத்திலும் அக்கம் பக்கத்திலும் நல்ல பெயர் கிடைக்கும்.
சிம்மம்
குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டையும் பன்னிரண்டாம் வீட்டையும் மற்றும் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக ஆறாம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! தவிர, குரு பார்க்கும் இடங்களெல்லாம் உங்களுக்கு மிகவும் நன்மை செய்யும்படியான அமைப்பாக உள்ளன. இவ்வளவு காலம் எவ்வளவோ விஷயங்களை எதிர்பார்த்து அவை நல்லபடியாக முடியவேண்டும் என்று தவமாய்த் தவமிருந்தீர்கள். எதுவும் கைக்கு எட்டாமல் இப்போது விரக்தியின் எல்லைக்கே போய், நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று எல்லாம் நல்லபடியாக மாற ஆரம்பிக்கும். ஆறாம் வீட்டுக்கு குரு பகவான் வந்திருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் படிப்படியாக குணமாகும். எதிரிகள் காணாமல் போவார்கள். நல்ல நண்பர்கள் அமைவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன் தீரும். பத்தாம் வீடு என்பது உத்யோக ஸ்தானம். உத்யோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால், இவ்வளவு காலம் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் அல்லது இப்போதிருக்கும் இடத்திலேயே உத்யோக உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தற்போது உள்ள வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலைக்கு மாறுவீர்கள்.12ம் வீட்டை குரு பார்ப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். பார்ப்பவர் குரு என்பதால் சுப செலவுகளாகத்தான் இருக்கும். வீட்டில் திருமணம், குழந்தைப்பேறு போன்ற நல்ல விஷயங்கள் நடப்பதால் மகிழ்ச்சிகரமான செலவுகளாகவே இருக்கும். குரு உங்களுடைய 2 ஆம் வீட்டையும் பார்க்கிறார்! 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். அதாவது செலவு எவ்வளவுக்கெவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு வரவும் வரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் இவ்வளவு காலம் காணாமல் போயிருந்து அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. திருமணம் குழந்தைப் பேறு போன்ற காரணங்களால் குடும்பத்தின் நபர்களின் எண்ணிக்கை உயரும். ஆறாம் வீட்டில் இருப்பதன் காரணமாக குரு பகவான் உங்களுடைய பகைவர்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்கவும், மனம் திருந்தி நட்பு பாராட்டவும் வைப்பார். ஏற்கனவே உள்ள நண்பர்களின் உதவி கிடைப்பதுடன் புதிதாக சிலர் நண்பர்களாகி அவர்களால் நன்மைகளும் லாபங்களும் கிடைக்கும். குரு உத்யோக ஸ்தானமாகிய பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் சீக்கிரத்தில் சில மாதங்களில் வேறு நல்ல வேலை கிடைத்து நல்ல சம்பளம் கிடைக்கும். மகிழ்ச்சியடைவீர்கள்.செலவு இழப்பு ஆகியவற்றைக் குறிக்கும் பன்னிரண்டாம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் செலவுகள் கட்டுப்படுவதுடன் சுப செலவுகள் ஏற்படும். அதாவது நீங்கள் செலவழிக்கும் பணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும்.குரு பகவான் உங்கள் குடும்ப ஸ்தானம் மற்றும் தன ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் நிறையப் பணம் வரும். லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். குடும்பத்தில் நிலவிக் கொண்டிருந்த குழப்பங்களும் சண்டைகளும் தீரும்.மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். படிப்பு மட்டுமல்லாமல் அதிருஷ்டப் பரிசுகள் போன்ற மகிழ்ச்சியூட்டும் விஷயங்கள் உண்டு. போட்டிகளில் வெற்றி உண்டு. பணப்பரிசுகளை வெல்வீர்கள்
கன்னி
குரு பகவான் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டுக்கு வருகிறார். அவர் உங்களுடைய ஒன்பதாம் வீட்டையும் பதினோராம் வீட்டையும் மற்றும் உங்கள் ஜென்மராசியையும் பார்க்கிறார். ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் குழந்தை இல்லாமல் ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் குழந்தை இருப்பவர்களாக இருந்தால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ரியத்துக்கும் தடையின்றிப் பணம் வந்து கொண்டே இருக்கும். குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியையும் பார்க்கிறார். அதாவது கன்னி ராசியை குரு பார்க்கிறார். ஏழரைச் சனியின் அல்லல் குறைந்து நிம்மதி காண்பீர்கள். ஆரோக்யம் மேம்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எண்ணங்களிலும் செயல்களிலும் மென்மையும் தன்மையும் வரும். முக்கியமாக எல்லாவற்றிற்கும் அலைந்து திரிந்து சாதிக்க வேண்டியிருந்த நிலை மாறும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் மாறி அமைதி நிலவ ஆரம்பிக்கும். வாழ்க்கை நிலை மிகவும் உயருவதால் இவ்வளவு காலமாக உங்களை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்த நண்பர்களும் உறவினர்களும் மனம் மாறி உங்களை நெருங்கி வருவார்கள். மாணவர்கள் ஓரளவு சிரமப்பட்டால் போதும் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும். பெண்கள் அதிக ஆசைப்பட வேண்டாம்.
துலாம்
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்குப் போகிறார் குருபகவான். இத்தனை காலம் (மூன்றாம் வீட்டில்) மறைவிடத்திலிருந்து கொண்டு உங்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாமல் இருந்த குரு, இப்போது உங்களுக்கு உதவுவார். நான்காமிடத்துக்கு வரும் அவர் உங்களுடைய 8 ம்வீடு, 10 ஆம் வீடு மற்றும் 12 ஆம் வீடுகளைப் பார்க்கிறார். கடன்களைத் தீர்ப்பீர்கள். பற்றாக்குறையாகவே இருந்து வந்த நிதி நிலை மாறி இப்போது நிதி நிலை மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை உங்கள் மனைவி/ கணவருக்கு வேண்டிய நகைகளை வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பாராதபடி புண்ணிய தலங்களுக்கு செல்வதற்கு அழைப்பு வரும். மனதில் நல்ல எண்ணங்கள் மேலோங்கி நன்மைகள் செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பயணங்கள் லாபமாக அமையும். திடீரென்று வெளிநாடு சென்று வர வேண்டியிருக்கும். நான்காம் வீடு என்பது தாயார் கல்வி வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயின் உடல்நிலையில் இருந்து வந்து பிரச்சினை படிப்படியாக சரியாகும். தாயாருக்கும் உங்களுக்கும் இருந்து வந்த இணக்கமற்ற சூழ்நிலையும் சரியாகும். சிலருக்குத் தாயிடமிருந்தோ, தாய் வழி உறவினரிடமிருந்தோ அல்லது தாய்மாமனிடமிருந்தோ லாபங்களும் சொத்துக்களும் வரும். நான்காம் வீடு வாகனத்தையும் குறிப்பதால் வாகனங்கள் வாங்கவோ விற்பனை செய்யவோ வேண்டியிருந்தால் அது நல்ல லாபத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் நிறைய ஆர்வம் ஏற்பட்டு நன்கு படிப்பார்கள். அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆசிரியர்களை குரு என்றுதானே சொல்வோம். குரு நல்ல இடத்தில் அமர்ந்திருப்பதால் ஆசிரியரின் அன்புக்கும் ஆசிக்கும் ஆளாவீர்கள்.குரு எட்டாமிடத்தைப் பார்க்கிறார். உங்களுடைய ராசிக்கு 8 ஆம் வீடு ஆயுள் ஸ்தானம் என்பதால் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்யம் மிக நல்ல நிலையில் இருக்கும். இத்தனை காலம் உடல் நிலையில் இருந்து வந்த சிரமங்கள் படிப்படியாகக் குறையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சற்று அதிகப்படியான கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். உங்களுடைய ராசிக்கு 10 ஆம் வீடு உத்யோக ஸ்தானம். அந்த வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சம்பளம் உயரும். பதவி உயரும். பல காலம் காத்திருந்த முன்னேற்றங்கள் அலுவலகத்தில் நிகழும். திடீரென்று பெரிய தொகை ஒன்று அலுவலகம் மூலமாக வரும். புதிய உத்யோகத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தைரியமாக முடிவெடுக்கலாம். உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீடு என்பது விரய ஸ்தானம். அதாவது செலவு இழப்பு ஆகியவற்றைக் குறிப்பது. 12 ஆம் வீட்டை குரு பார்ப்பதாலும் குரு சுப கிரகம் என்பதாலும் உங்களுக்கு சுபமான செலவுகள் வரும். அதாவது புண்ணிய காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்வதற்கும் பணம் செலவு செய்வீர்கள். இத்தனை காலம் களவு போன பொருட்களும் நீங்கள் அநாவசியத்துக்கு மற்றவர்களிடம் இழந்தவையும் தானாகத் திரும்பி வரும்.முன்பு கிடைக்காமல் போன வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வந்து நன்மை தரும்.அலுவலகத்திலும் வீட்டிலும் எல்லோரும் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். மாணவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். நன்மைகளையும் வெற்றியையும் பார்க்கப்போகிறீர்கள்.
விருச்சிகம்
குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடாகிய மகரத்துக்கு வருகிறார். அங்கிருந்து உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும், 11 ஆம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக 3 ம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! குரு பார்க்கும் ஒவ்வொரு இடமும் அற்புதமானவை. குரு பகவானைப் பொருத்த வரையில் அவர் இருக்கும் இடத்தைவிடப் பார்க்கும் இடத்துக்கு முக்கியத்துவம் அதிகம் என்பது நமக்குத் தெரியும் என்பதால் உங்களுக்கு மிக நன்மையளிக்கக்கூடிய இடங்களைப் பார்க்கும் குரு இன்னும் ஒரு வருடத்துக்கு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். 3 ம் வீடு சகோதரர்களுக்கு உரிய இடம். உங்கள் சகோதரருக்கும் உங்களுக்கும் இடையே இருந்து வந்த பகை உணர்ச்சிகள் குறைந்து அன்பு மலரும் ஒருவருக்கு ஒருவர் உதவுவீர்கள். 3 ஆம் வீட்டிலிருக்கும் குரு பகவான் ஏழாம் வீட்டைப் பார்க்கிறார் அல்லவா. இது ஒரு அருமையான அமைப்பாகும். ஏழாம் வீடு என்பது களத்திர ஸ்தானம். களத்திரம் என்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் சொல். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் நலம் கூடும். அவருடைய ஆரோக்யத்தில் ஒரு வேளை பிரச்சினைகள் இருந்திருக்குமானால் இனி எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/மனைவிக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். அவர் வீட்டிலிருந்து வர வேண்டிய சொத்துக்கள் வரும். மேலும் உங்களின் ஏழாம் வீடு குரு பகவானின் வீடேயாகும். தன் வீட்டைத்தானே பார்க்கும் எந்த கிரகமும் பலம் அடையும். குரு பார்ப்பதால் மங்களகரமான பலன்கள் உண்டு.இத்தனை காலம் திருமணம் நடக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்னும் மூன்று நான்கு மாதங்களில் கெட்டி மேள சத்தம் கேட்கும். நிறைய ஆடை அணி மணிகளும் தங்க நகைகளும் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உள்ள பங்குதாரர்களால் நன்மை உண்டாகும். சிலர் பங்குதாரர்களுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பித்து நன்கு லாபம் பெறுவீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார். ஒன்பதாம் வீடு சௌபாக்ய ஸ்தானம் என்பதால் உங்களுடைய வாழ்க்கை மேம்பாடு அடையும். வாழ்க்கை நிலை உயரும். வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிப் போடுவீர்கள். எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றுவீர்கள் என்பதால் வீட்டில் அனைவரின் அன்புக்கும் பாத்திரமாவீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு 11ம் வீட்டைப் பார்க்கிறார். 11 ஆம் வீடு என்பது லாப ஸ்தானம். முழு சுபரான, பணத்துக்கு அதிபதியான குரு பகவானே அந்த லாபஸ்தானத்தைப் பார்த்தால் கேட்கவா வேண்டும். நிறையப் பணம் வரும். லாபம் குவியும்.எதிர்பார்த்த நன்மைகளும் எதிர் பாராத நன்மைகளும் வரும். பல காலம் காத்திருந்த பாக்கிகள் வசூலாகும். கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு இத்தனை காலமாக நல்ல விஷயங்களும் சுப காரியங்களும் தள்ளிப்போய்க் கொண்டிருந்தததால் மனதில் விரக்தியும் கவலையும் அரித்துத் தின்றிருக்கும். அந்த நிலை மாறி 2009 ம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே நம்பிக்கையளிக்கும்படியான திருப்பங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. மாணவர்களுக்கு ஓரளவு வெற்றி வாய்ப்புக்களும் அதிருஷ்டம் மற்றும் திறமை சார்ந்த பரிசுகளும் கிடைக்கும்.
தனுசு
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மகரத்திற்கு வந்திருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6,8,10 ஆம் வீடுகளைப் பார்க்கிறார். ஜென்ம குருவாக இருந்தவர் இப்போது இரண்டாம் வீட்டுக்கு வந்திருப்பதிலிருந்தே உங்களுக்கு முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கும். 2 ஆம் வீடு என்பது தன ஸ்தானம். அதாவது வரவு! குரு பார்த்தால் லாபங்களும் வரவும் அதிகரிக்கும். நிறைய வருமானங்களும் லாபமும் திடீர் அதிருஷ்ட வாய்ப்பும் வரும். 2 ஆம் வீடு என்பது குடும்ப ஸ்தானமும்கூட. குடும்ப ஸ்தானத்திற்கு குரு வந்திருப்பதால் குடும்பத்தில் இவ்வளவு காலம் காணாமல் போயிருந்த அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை மீண்டு கலகலப்பும் சந்தோஷமும் நிலவும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிருஷ்ட லாபங்கள் நிச்சயம் உண்டு. என்றைக்கோ செய்த முதலீடுகள் லாபம் தரும். சொத்துக்கள் வாங்குவதனாலும் விற்பதனாலும் செல்வம் பெருகும். குடும்பத்தில் யாருக்கேனும் திருமணம் அல்லது குழந்தை பிறப்பதன் மூலம் குடும்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை(ரிஷபத்தை) பார்க்கிறார். ஆறாம் வீடு என்பது நண்பர்கள், பகைவர்கள் நோய் போன்றவற்றைக் குறிக்கிறது. நண்பர்களால் நன்மை ஏற்படும். நண்பர்கள் உதவியால் புதிய லாபங்களும் நன்மைகளும் ஏற்படும். நீங்கள் ஆரம்பிக்கப்போகும் புதிய தொழில் போன்றவற்றிற்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை (கடகத்தை) பார்க்கிறார். உங்களுடைய ராசிக்கு 8 ஆம் வீடு ஆயுள் ஸ்தானம் என்பதால் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்யம் மிக நல்ல நிலையில் இருக்கும். இத்தனை காலம் உடல் நிலையில் இருந்து வந்த சிரமங்கள் படிப்படியாகக் குறையும். நீண்ட கால நோய்களால் கஷ்டப்பட்டவர்கள்கூட அதிலிருந்து நிலையாக மீள்வதற்கு வழி கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டை (கன்னியை)ப் பார்க்கிறார். பத்தாம் வீடு உத்யோக ஸ்தானம். உங்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சம்பளம் உயரும். பதவி உயரும். பல காலம் காத்திருந்த முன்னேற்றங்கள் அலுவலகத்தில் நிகழும். திடீரென்று பெரிய தொகை ஒன்று அலுவலகம் மூலமாக வரும். புதிய உத்யோகத்துக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வேறு நல்ல வேலை கிடைத்து மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிம்மத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் அலுவலகத்தில் நிறைய உழைக்க வேண்டி வரும். ஆனாலும் எந்த உழைப்பும் வீணாகாது. முன்பு உழைத்தவற்றிற்கும் இப்போது பலன் உண்டு. குழந்தைகளால் சிறு மனக்கவலைகள் இருந்தாலும் அவை உடனுக்குடன் சரியாகிவிடும். மாணவர்கள் கவனம் சிதறாமல் சற்று சிரத்தையுடன் படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம். மேல்படிப்பு மிகவும் நல்ல முறையில் அமையும்.
மகரம்
உங்களுடைய ஜென்ம ராசிக்கு குரு வருகிறார். பொதுவாக ஜென்ம குரு பற்றி நிறையப் பேர் பயமுறுத்துவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களில் யாருக்கெல்லாம் ஜென்ம குரு இருந்தது என்றும் அந்தக் கால கட்டத்தில் அவர்களுக்கு என்னென்ன நடந்தது என்றும் நினைத்துப் பாருங்கள். ஜென்ம குரு சில உடல் வருத்தங்களைக் கொடுப்பார் என்றாலும் எதுவும் நிரந்தரப் பிரச்சனையாகாது.மேலும் பொதுவாக ஜென்மத்தில் (அதாவது ராசியில்) இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! அதனால் செலவுகளோ மன வருத்தங்களோ இருக்காது. மேலும் மனதில் மிகுந்த உறுதியையும் தைரியத்தையும் கொடுப்பார். சில பயங்கள் அறவே நீங்கும். அதுவும் தவிர உடல் உழைப்பினால் சுப பலன்கள் ஏற்படுமாறு செய்வார். அதாவது அலைச்சல்களுக்கு நல்ல பலன் இருக்கும். ஆனால் குரு பார்க்கும் இடங்கள் ஒவ்வொன்றும் உங்களுக்கு அற்புதப் பலன்களைக் கொடுக்கப் போவது உறுதி. சும்மாவா! குரு தானிருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம் வீட்டையும் ஏழாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்ப்பார். உங்கள் ராசியில் அவர் இருப்பதால் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டையும் ஏழாம்வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்க்கிறார். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடாகிய ரிஷப ராசியைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். இதுவரை கணவர்/ மனைவியின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/ மனைவிக்கு உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சம்பளம் உயரும். அவர் வேறு நல்ல வேலைக்கு மாறவும் வாய்ப்பு உண்டு. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டைப் பார்க்கிறார். ஒன்பதாம் வீடு என்பது சௌபாக்ய ஸ்தானம். வாழ்க்கை வசதிகள் பெருகும். நிம்மதியும் மகிழ்ச்சியும் மனதில் நிலவுவதுடன் பணமும் நிறையப் புரண்டு மனதிலும் பாவ சிந்தனைகள் இல்லாமல் இருக்கப்போகிறீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகுந்த நன்மைகளைச் செய்யப்போகிறார் குரு பகவான். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பயமின்றிப் படித்து முன்னேறுவீர்கள்.
கும்பம்
குரு உங்களுடைய பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் உங்களுடைய 4 ஆம் வீட்டையும் ஆறாம் வீட்டையும் மற்றும் எட்டாம் வீட்டையும் பார்க்கிறார். பொதுவாக 12ம் வீட்டில் இருக்கும் குரு நன்மை செய்ய இயலாது. ஆனால் குரு தனது நீச வீட்டிற்குப் போகிறார். எனவே பலவீனம் அடிபட்டு ராஜயோகத்தை அளிப்பார்! கடன்களை அடைப்பீர்கள்! செலவுகள் ஏற்படும்போது கடன் சம்பந்தப்பட்ட கவலைகள் மனதை அரிக்காது. அந்த அளவுக்கு, உங்களுக்கு நல்ல வழியில் பணம் வந்துதான் மகிழ்ச்சியான செலவு ஏற்படும். குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டைப் பார்க்கிறார். நான்காம் வீடு என்பது தாயார் கல்வி வாகனம் ஆகியவற்றைக் குறிக்கும். உங்கள் தாயின் உடல் நிலையில் இருந்து வந்து பிரச்சினை படிப்படியாக சரியாகும். நான்காம் வீடு வாகனத்தையும் குறிப்பதால் வாகனங்கள் வாங்கவோ விற்பனை செய்யவோ வேண்டியிருந்தால் அது நல்ல லாபத்தைக் கொடுக்கும் (அல்லது நஷ்டம் ஏற்படாது) மாணவர்களுக்குக் கல்வியில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு கவனமாகப் படிப்பார்கள். நிறைய மதிப்பெண் பெறுவீர்கள். ஆறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நோய்கள் படிப்படியாக குணமாகும். எதிரிகள் காணாமல் போவார்கள். நல்ல நண்பர்கள் அமைவார்கள். நண்பர்களால் நன்மையும் லாபமும் உதவியும் கிடைக்கும். கடன்கள் அடையும். வர வேண்டிய கடன்கள் வசூலாகும். எட்டாம் வீடாகிய ஆரோக்ய ஸ்தானத்துக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் உங்களை இவ்வளவு காலமாக பயமுறுத்தி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நோய் நொடிகள் பறந்தோடும். மாணவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு சிரமப்பட்டு கவனத்துடன் படிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்ல மதிப்பெண்ணும் பரிசுகளும் உதவித் தொகையும் பெறுவீர்கள்.
மீனம்
குரு பகவான் உங்களுடைய 11 ம் வீடாகிய லாபஸ்தானத்தில் வந்து அமர்கிறார். அவர் அந்த வீட்டிலிருந்து உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டையும். 5 ஆம் வீட்டையும் மற்றும் 7 ஆம் வீட்டையும் பார்க்கிறார். பதினோராம் வீடு லாபஸ்தானம் என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். இப்போது நீங்கள் செய்யும் எந்த முயற்சியுமே நன்மையையும் லாபத்தையும் கொடுக்கும். சிறிய முயற்சிகளுக்குப் பெரிய பலன்கள் இருக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் நேர்மையாகத் திருப்பிக் கொடுப்பார்கள். முழு சுபரான, பணத்துக்கு அதிபதியான குரு பகவானே லாபஸ்தானத்தில் அமர்ந்தால் கேட்கவா வேண்டும். நிறையப் பணம் வரும். லாபம் குவியும். எதிர்பார்த்த நன்மைகளும் எதிர் பாராத நன்மைகளும் வரும். பல காலம் காத்திருந்த பாக்கிகள் வசூலாகும். கடன்களை அடைப்பீர்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள் மேலும் மேலும் பல காலம் முன்னேற்றத்தைக் காணலாம். குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடாகிய மீனத்தைப் பார்க்கிறார். அதாவது தன் வீட்டைத் தானே பார்க்கறார். அப்படிப் பார்த்தால் குரு பகவானின் நன்பலன்கள் அதிகரிக்கும். 3 ஆம் வீடு என்பது சகோரர்களைக் குறிக்கும். இத்தனை காலமாய் சந்தர்ப சூழ்நிலைகளின் காரணமாக உங்களுக்கும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளும் மனத் தாபங்களும் நீங்கி சுமுகமான உறவு மீளும். அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே போக்கு வரத்து இருக்கும். அவரால் உங்களுக்கும் உங்களால் அவருக்கும் நன்மையும் லாபமும் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடாகிய மிதுன ராசியைப் பார்க்கிறார். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தையும் குறிக்கிறது என்பதால் உங்கள் மகன் அல்லது மகள் வாழ்வில் நிறைய முன்னேறி உங்களைப் பெருமை கொள்ளச் செய்வார். படிப்பில் உங்கள் குழந்தை செய்யப்போகும் சாதனை பெரிய அளவில் இருக்கும். உங்கள் மகள்/ மகள் உத்யோகத்துக்குப் போகிறவராய் இருந்தால் அவருக்கு உத்யோக உயர்வு சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். மகள் அல்லது மகள் வாழ்க்கையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் நீங்கள் முற்பிறவியிலும் இந்தப் பிறவியிலும் செய்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு உதவ முன்வரும். நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பல காலம் நிறைவேற்றாத பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோயில் குளம் என்று போவீர்கள். நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஏழாம் வீடு என்பது கணவன்/ மனைவிக்கு உரிய இடமாகும். இது வரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆகி மண வாழ்க்கையில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவையெல்லாம் நல்லபடியாக முடிந்து நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் நல்லுறவும் இணக்கமான அன்பும் நிலவும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுடன் ஒருவரால் ஒருவருக்கு லாபம் மற்றும் நன்மைகள் ஏற்படும். கணவன்/ மனைவி வழியிலிருந்து சொத்துக்கள் வரும். இதுவரை கணவர்/ மனைவியின் உடல் நிலையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவை எல்லாம் சரியாகும். உங்கள் கணவருக்கு/ மனைவிக்கு உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சம்பளம் உயரும். அவர் வேறு நல்ல வேலைக்கு மாறவும் வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு சற்றும் நினைத்துப் பார்த்திராத நன்மைகள் உண்டாகும்.
Abonnieren
Kommentare zum Post (Atom)

Keine Kommentare:
Kommentar veröffentlichen