Freitag, 7. November 2008

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2007-2009

05.08.2007 - 08.09.2009
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி (அதாவது ஆடி மாதம் 20 ஆம் தேதி) சனி பெயர்ச்சி நிகழவிருக்கிறது.(சிலர்வேறு வேறு தேதிகளைப் போட்டுக்குழப்பிக் கொள்கிறார்கள். சிலர் ஏற்கனவே சனி பெயர்ச்சி ஆகிவிட்டதாகச் சொல்லிக் குழப்புகிறார்கள்/ குழம்புகிறார்கள். நம்பகமான சுத்த வாக்கிய பஞ்சாக்கத்தின்படி இந்தத் தேதிதான் சரி. யார் குழப்பினாலும் குழம்பாதீர்கள்) சனி பகவான் தற்போது உள்ள கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு நகர்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்கு எந்தெந்த மாதிரியான பலன்கள் இருக்கும்? பார்ப்போமே! சனிபெயர்ச்சியின் பலன் எப்படி இருந்தாலும், உங்கள் ராசிக்கு அவர் எத்தனையாவது வீட்டுக்கு வந்தாலும் உங்களுக்கு அடுத்த ஒரு வருடத்துக்கு எந்த பிரச்சினையும் வராது. சனி எந்த வீட்டிற்குப் பெயர்ந்தாலும் பலன் கொடுக்க சில மாதங்கள் ஆகும். அதற்குள் நவம்பரில் குரு பெயர்ச்சி வந்துவிடும். குரு பார்வை சனி இருக்கும் சிம்ம ராசிக்குக் கிடைத்துவிடும். அப்போது குரு பகவானின் நற்குணங்களோ மேலோங்கி நன்மை செய்யும்.


மேஷம்
இவ்வளவு காலமாக நான்காம் வீட்டில் சனி இருந்தால். இதை அர்த்தாஷ்டம சனி என்போம் (அர்த்தம் என்றால் பாதி. அஷ்டமம் என்றால் எட்டு. எட்டில் பாதி நான்கு) இது சற்று பொல்லாத இடம். இதன் காரணமாக எதை எடுத்தாலும் தடைகளும் தாமதங்களும் இருந்திருக்கும். உடல் நிலையில் கோளாறு இருந்திருக்கும். எதிர்பார்த்த தொகைகள் தாமதப்பட்டு தாமதப்பட்டு கடைசியில் பகுதி பகுதியாகத் திரும்பக் கிடைத்திருக்கும். இனி அந்தக் கவலைகள் எதுவும் இல்லை. வீட்டில் தடைப் பட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் நடைபெறும். உடல் நலத்தில் இருந்து வந்தகோளாறுகள் எல்லாம் ஓடிப்போகும். குழந்தைகள் வெளி நாட்டுக் கல்வி அல்லது திருமணம் போன்ற நல்ல காரணங்களுக்காக உங்களை விட்டுப் பிரிய நேர்ந்தாலும் அது நல்ல முறையிலான பிரிவாகவே இருக்கும். சுருங்கச் சொன்னால் இவ்வளவு நாளாகக் கண்ணீர், இனி ஆனந்தக் கண்ணீர்தான் போங்கள்! அவசரம் மற்றும் பதற்றம் காரணமாக உங்களுக்கு இவ்வளவு நாட்களாய் ஏற்பட்ட சிரமங்கள் மறைந்து அமைதியான போக்கும் நிதானமான சிந்தனையும் ஏற்பட்டு அதனால் வாழ்க்கைப் பாதையில் சீரான மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் மற்றவர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த பிரச்சினை மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு உங்களால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதி நிலவும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினைகளும் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகளும் திடீரென்று மறைந்து நிம்மதி நிலவும். அதிலும் 2007 ஆம் ஆண்டு இறுதிக்குப் பிறகு எல்லா வகையான சுக செளகர்யங்களும் ஏற்படும். எதிர்பார்த்த நன்மைகள் எல்லாம் கைகூடும். ஜாதகத்தின்படி நல்ல நேரமாக இருந்தால் எதிர்பாரா நற்பலன்கள்கூடக் கிட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் கடன் தொல்லையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தீர்கள். சில தீய நண்பர்களின் சேர்க்கையால் பாதை விலகிப் போய்க்கொண்டிருந்தவர்கள் மனம் திருந்தி பெற்றோரின் வயிற்றில் பால் வார்ப்பீர்கள். பதவி மற்றும் சம்பளம் உயரும். நேர்மையாக உழையுங்கள். பல மடங்கு அதிக பலன் உண்டு. மாணவர்களுக்கு மேகம் விலகி வெளிச்சம் நிலவுவதுபோல் வழி புலப்படும்.

ரிஷபம்
வெளியூரிலிருந்தும் வெளி நாட்டிலிருந்தும் நல்ல செய்திகள் வரும். இவ்வளவு காலம் மூன்றாம் வீட்டில் இருந்து வந்த சனி பகவான் இனி நான்காம் வீட்டில் உலவுவார். ''அட ராமா! நான்காம் வீடா! அது அர்த்தாஷ்டம சனியாச்சே!'' என்று உங்களைச் சுற்றி உள்ளவர்கள் சொன்னாலும் பாவம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அகலமாய்ப்புன்னகைத்துவிட்டு அந்தண்டை நகர்ந்துவிடுங்கள். அர்த்தாஷ்டம சனி (அர்த்தம் என்றால் பாதி. அஷ்டமம் என்றால் எட்டு. எட்டில் பாதி நான்கு) இது சற்று பொல்லாத இடம்தான். யார் இல்லை என்றார்கள். எனினும் ரிஷப ராசிக்காரர்களுக்கு யோக காரகன் சனியாவார். எனவே உங்களுக்கு மட்டும் சனி எந்த வீட்டில் இருந்தாலும்நன்மைதான் செய்வார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.போதாக் குறைக்கு இந்த வீடு நவம்பர் முதல் குரு பார்வையும் பெறும்போது உங்களுக்கு என்ன கவலை! ஜாதகப்படி நல்ல காலமாக இருப்பின் பதவி சம்பளம் எல்லாம் உயரும். எனினும் சனி என்னும் மந்த காரகன் (அதாவது தாமத நாயகன்) தன் குணத்தைக் காட்டுவதற்கு சில நன்மைகளை சற்று தாமதப்படுத்தக்கூடுமே தவிர தடுக்க மாட்டார். மேலும் குரு பார்வையும் கிடைக்கப் போவதால் மேலும் அதிக நன்மைகளை அனுபவிக்கக் கொடுப்பினை உண்டு. தாய் வழியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு (2008 இறுதியில்) தாயின் உடல் நலத்தில் கவனம் அதிகம் எடுப்பது நல்லது.வாக்கு வாதங்கள் மற்றும் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அலுவலகத்தில் யாருடனும் எந்த வம்பும் வைத்துக் கொள்ள வேண்டாம். இவ்வளவு காலம் சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி சுமுக நிலை நிலவும். எல்லா இடத்திலுமே சற்று பொறுமையாகப் போவது நல்லது. எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு போகப்பாருங்கள்.சனிக்கிழமைகளில் நவகிரகம் சுற்றுங்கள். சனி பகவான் திருத்தலங்கள்/ கோயில்களுக்கு எத்தனை அடிக்கடி செல்ல முடியுமோ செல்லுங்கள். எள்ளால் செய்த இனிப்பை வழங்குங்கள்.

மிதுனம்
அப்பாடா. ஏழரைச் சனி என்ற பெரிய பாம்பின் வாயிலிருந்து பாதுகாப்பாக விலகி வெளியே வந்துவிட்டீர்களா. இனி எல்லாம் சுகமே! எவ்வளவு சோதனைகள் எவ்வளவு வேதனைகளை அனுபவித்தீர்கள்! ஆயுளுக்கும் மறக்குமா அவையெல்லாம்! குறிப்பாகக் கடந்த இரண்டரை வருடங்களாக உங்கள் வாயே உங்களுக்க எதிரியாக இருந்திருக்கும். செல்வத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் சனி இருந்ததால் வங்கி இருப்பெல்லாம் கரைந்திருக்கும். குடும்ப ஸ்தானத்தைக் குறிப்பதும் இதே இரண்டாம் வீடுதான் என்பதால் வீட்டில் இவ்வளவு காலமும் சண்டையும் சச்சரவும்நிலவியிருக்கும். எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டீர்கள். நிறையப் பரிகாரங்கள் செய்தவர்களும், ஜனன கால ஜாதகப்படி நல்ல நேரத்தில் நடை போட்டுக் கொண்டிருந்தவர்களும் ஓரளவு பிழைத்திருப்பீர்கள். குரு பார்வை சிரமங்களை சற்று குறைத்திருக்கக்கூடும். எனி தன் இயல்பின்படி குறைந்த பட்ச சிரமங்களையாவது கொடுத்திருப்பார். குறிப்பாக அலுவலகத்தில் உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சம்பள உயர்வும்கூடக் கிடைக்காமல் போயிருக்கலாம். இனிமேல் பாருங்களேன். ஒரு பெரிய பாறையை நகர்த்தி நதி நீருக்கு வழி விட்டதுபோல் நன்மைகள் எல்லாம் புது வெள்ளமாய்ப் பெருகி ஓடப் போகின்றன உங்கள் வாழ்வில். வீட்டில் திருமணம் தடைபட்டிருக்கலாம். ஏன் உங்களுக்கே கூட திருமணம் பற்றி கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவை எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போகும் கவலை வேண்டாம். வேண்டும் வேண்டும் என்று நீங்கள் ஏழரை வருடங்களாக வேண்டிய நன்மைகள் எல்லாம் இப்போது ஓய்ந்து உட்காரும்போது உங்களை வந்து அடைவதால் உற்சாகத் துள்ளலுடன் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏற்பட்டு நிமிருவீர்கள்.மகிழ்சி காரணமாகக் கடமை தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மையற்றவர்களின் சகவாசம் முன்பு இருந்திருக்குமே அவற்றையெல்லாம் விலக்கப் பாருங்கள். முன்பிருந்த தீய பழக்கங்களையும் இப்போது விடுவது சுலபம்.மாணவர்களுக்கு முன்பைவிட நன்றாக படிப்பும் மதிப்பெண்களும் பரிசுகளும் வரும். அலுவலக வாசிகளுக்கு பதவியும் சம்பளமும் உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

கடகம்
ஏழரைச் சனிக்குள்தான் நீங்கள் இன்னமும் இருக்கிறீர்கள் என்றாலும்கூட உங்களுடைய கடக ராசியிலிலேயே உட்கார்ந்து உங்கள் ஆரோக்யத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த சனி கிளம்பி விட்டாரய்யா கிளம்பிவிட்டார்! இவ்வளவு நாட்கள் கணவன் மனைவி பிரச்சினை, நண்பர்களுடனான பிரச்சினை, அலுவலக மேலதிகாரியுடனும் பிரச்சினை கீழே வேலை செய்பவர்களுடனும் பிரச்சினை, தொழில் கூட்டாளியுடன் பிரச்சினை என்று ஏதாவது ஒன்றிரண்டு மன சங்கடங்களாவது இருந்திருக்குமல்லவா! அது எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும். குடும்பத்தில் ஒரு புரிதல் உண்டாகும். அல்லது நெருங்கிய ஒருவர் மீது நீங்கள் கொண்டிருந்தது வீண் சந்தேகம்தான் என்று வேறு ஒருவர் மூலம் விளங்கும். நடுவில்மூன்றாவது மனிதருக்கு இடம் கொடுத்ததனால் தாம்பத்தியத்திலும்கூட நிம்மதி இழந்திருப்பீர்களாய் இருக்கும். இப்போதுதான் பனி மூட்டம் விலகியது போல் ஒருவருக்கொருவர் உண்மை விலக ஆரம்பித்திருக்கும். வீட்டிற்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைக்கூட வாங்க முடியாமல் ஏங்கியிருந்தவர்கள் புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். இதனால் உங்கள் குடும்பத்தினரின் முன்னால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பல காரணங்களுக்காக அறிந்தும் அறியாமலும் பணத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருந்தீர்கள். ஒரு வழியாக வங்கி இருப்பின் இலக்கங்கள் கூடும். அலட்சியம் அஜாக்கிரதை ஆகியவற்றை ஏற்படுத்தி அலுவலகத்தில் உங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த சனி பகவானுக்கு உங்கள் மீது இரக்கம் பிறக்கும். செய்த தவறுகளுக்கு நீங்களே தீர்வு கண்டு நிம்மதியடைவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களை முந்திக்கொண்டு சிலர் முன்னேறி உச்சியில்போய் உட்கார்ந்து கொண்டார்கள் அல்லவா. அவர்கள் உங்களை வியப்புடன் பார்க்கும்படி நீங்கள் இயல்பாக முன்னேற வேண்டிய காலம் வந்துவிட்டது.எனினும் ஒரு விஷயத்தை நீங்கள் மறக்கவே கூடாது. தற்போது சனி பகவான் உங்கள் வாக்கு மற்றும் குடும்பம் மற்றும் செல்வத்தைக் குறிக்கும் இரண்டாம் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதனால் சில சிரமங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரக்கூடும். ஆனால் கட்டாயம் சிரமப்படுவீர்கள் என்று நான் பயமுறுத்த மாட்டேன். பல காரணங்களால் நீங்கள் விடுபட நிறைய வாய்ப்பு உண்டு. அதாவது உங்கள் பேச்சில் கவனமாக இருந்துவிட்டால் வாக்கு ஸ்தானத்தில் சனி பிரச்சினையை ஏற்படுத்த முடியாது. அநாவசியமாகவும் ஆரோக்யத்தைக் கெடுக்கும்படியாகவும் ஏற்படும் செலவுகளை நீங்களாய்க் கட்டுப் படுத்துங்கள். தீய வழிகளில் செலவு செய்ய மாட்டேன் என்பதில் உறுதியாக இருங்கள். குடும்பஸ்தானத்தில் சனி இருக்கிறார். மனைவி மக்களிடமோ பெற்றோரிடமோ உங்கள் வீர தீரத்தையெல்லாம் காட்டக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இவற்றையெல்லாம் நீங்கள் கடுமையான விரதம் போல் கடைப்பிடித்தால் சனி பகவானுக்கே உங்களைப் பார்த்தால் ஐயோ பாவம் என்று இரக்கம் தோன்றி உங்களை அதிகம் சங்கடப்படுத்தாமல் விட்டுவிடுவார். குரு பார்வை இருக்கவே இருக்கிறது. காப்பாற்றிவிடும். சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதுடன் விநாயகரை விடாமல் தொழுங்கள்.

சிம்மம்
உங்கள் வயது முப்பதுக்கு மேல் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் மற்றவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தி அதனால் சங்கடம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனைவிக்கு/ கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படாதபடி முன் ஜாக்கிரதையாக இருங்கள். வியாபாரத்தில் / தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்சினை வர நீங்கள் காரணமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் காரணமாக இருந்தால் அதை சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். பெரிய முதலீடுகள் எதிலும் கொஞ்ச நாட்களுக்குப் பணத்தை முடக்க வேண்டாம்.வம்பு சண்டை வலு சண்டை எதற்கும் போக வேண்டாம். அதிகம் பயமுறுத்த விரும்பவில்லை. குரு பார்வை இருப்பதால் அடுத்த ஒரு வருடத்துக்கு உங்களுக்கு ஏழரைச் சனி என்பதோ உங்கள் ராசியிலேயே சனி அமர்ந்திருக்கிறார் என்பதோ எந்த வகையிலும் வெளிப்பட்டு பிரச்சினை ஏற்படாது. வாகனங்களால் செலவுகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டுக்கு செல்வீர்கள். பெரிய லாபங்களை உடனடியாக எதிர் பார்க்க வேண்டாம். மாணவர்கள் கட்டாயம் சற்று அதிக முயற்சி எடுத்துப் படித்தாக வேண்டிய கால கட்டம் இது. ஒரு விஷயத்தை நிச்சயமாக நம்பலாம். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அதற்குத்தகுந்த பலனை எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்குத் தகுந்த பலனை மட்டும்தான் எதிர்பார்க்கலாம்! எனவே சோர்ந்து போகாமல் உழைக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனமாக இருங்கள். புதிய வாகனங்கள் எதையாவது வாங்குவதானால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துவிட்டு விஷயத்தில் இறங்குங்கள்.

கன்னி
புதிதாக ஏழரைச் சனி உங்கள் வாழ்வில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறார். நீங்கள் முப்பது வயதைத் தாண்டியவர் என்றால் கவலையே வேண்டாம். முப்பது வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முக்கியமாக தீய நண்பர்கள் உங்களை அணுகி உங்களைத் தங்கள் வசப்படுத்தி உலகத்தில் உள்ள சகல விதமான கெட்ட பழக்கங்களையும் உங்கள் மீது திணித்து மகிழாமல் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல நண்பன்போல் நடித்து உங்கள் பணத்துக்கு வேட்டு வைக்காமல் இருக்கிறார்களா என்பதில் கவனமாக இருங்கள்.ஆரோக்யம் பற்றி அதீத கவனமாக இருங்கள். மருத்துவ காப்பீடு செய்து கொள்ளுங்கள். செலவுக்கு மேல் செலவு வரும். வாகனங்களுக்காக அதிகமாக செலவு செய்வீர்கள். அவசிய செலவுகளை விட அநாவசிய செலவுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதால் பணத்தை எடுக்க முடியாதபடி வங்கியில் முடக்கிப் போட்டுவிடுங்கள். வீடு நிலம் போன்ற பெரிய செலவுகளும் ஏற்படக்கூடும். உஙகள் வீட்டில் நீங்களே அல்லது குடும்பத்தில் உள்ள யாராவதோ வெளிநாட்டுக்குப் பயணம் போகப்போவதால் நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். எந்த செலவுமேஎதிர்பார்த்ததைவிட சற்று அதிகமாகப் போய்த்தான் நிற்கும். ஏற்கனவே வீடு கட்ட ஆரம்பித்து வளர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக செலவாவதுடன் சற்று தாமதமாகித்தான் வீடு கைக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் பெரிய பாராட்டுக்ளையெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். கடமைகளைக் குறைவில்லாமல் செய்யுங்கள். குறுக்கு வழி. தீய வழி என்று எதில் இறங்கினாலும் தண்டனை கொடுக்காமல் விடவே மாட்டார் சனி பகவான். ஜாக்கிரதை. எனினும் உங்களை நிறைய உழைக்க வைத்து அதற்கு நிறைய நற்பலன்களைக் கொடுக்கும் நியாயவான் அவர் என்பதையும் மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள்.பெரிய முதலீடுகள் செய்யவேண்டுமானால் நவம்பருக்குப் பிறகு செய்யுங்கள்.

துலாம்
உங்கள் ராசிக்க பதினோறாம் வீடாகிய லாபஸ்தானத்திற்கு சனி பகவான் வரவிருக்கிறார். இத்தனை காலம் பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தார். பத்தாம் வீடு என்பது உத்யோகத்தைக் குறிக்கும் இடம். இவ்வளவு காலமாக நிறைய உழைத்து அதற்கான பலன் எதுவும் இல்லாமல் பாராட்டும் கிடைக்காமல் நொந்து புழுங்கிப் போய் இருந்தீர்கள். அப்பாடா என்று ஜன்னலைத் திறந்தவுடன் காத்து முகத்தில் வீசி களைப்பையெல்லாம் போக்குவது போல் கடகடவென்று என்றைக்கோ உழைத்தவற்றிற்குக்கூட இன்றைக்கு அரியர் வரும். லாபஸ்தானத்தில் எந்த கிரகம் இருந்தாலும்அவர் நற்பலனைத்தான் கொடுக்கும் என்று ஜோதிட விஞ்ஞானம் சொல்கிறது. சனி பகவான் அந்த இடத்திற்கு வந்திருப்பதால் குறுக்க வழியிலோ திருட்டுத்தனத்தாலோ பணம் வராமல் அழகாக நீங்கள் உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கும். மனதில் நிம்மதியும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளின் ஸ்தானத்தை சனி பார்க்கிறார். ஒருவேளை இவ்வளவு காலம் உங்கள் குழந்தைகளுக்கு வேலை கிடைக்காமல் அல்லது படிப்பில் பிரச்சனை இருந்தால் அவை எல்லாம் இப்போது சரியாகும். வெளி நாட்டுப் பயணங்களுக்கு முயன்று கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அதற்கான வேளை வந்து பயணம் கைகூடும். மேல்படிப்பு சற்று அலைந்து திரிந்தபிறகுதான் வசப்படும். எனினும் எதிலுமே தாமதம் இருக்க சற்று வாய்ப்பு உள்ளதே தவிர எதுவும் தோல்வியடையாது. சிரமப்பட்டு முயற்சி செய்தவர்களுக்கு எந்த விஷயமானாலும் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.வேறு ஊருக்கு மாற்றல் கேட்டுக் காத்திருந்தவர்களுக்கு விருப்பம் நிறைவேறும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவை நிச்சயமாகக் கிடைக்கும். விருப்பம் இல்லாமல் வேறு ஊருக்கு மாற்றலானவர்களுக்கு பயம் தீர்ந்து ஊரும் உத்யோகமும் பிடித்துப் போய் நிம்மதி நிலவும். இவ்வளவு காலம் பயந்து கொண்டு காத்திருந்த விஷயங்கள் நல்ல முறையில் நடந்தேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் லாபம் வரும். கணவன் மனைவிக்குள் இவ்வளவு காலம் இருந்து வந்த கருத்து பேதங்கள் தீரும். குடும்பத்தில் மூன்றாவது மனிதர்களால் இருந்து வந்த தொல்லைகளும் பிரச்சினைகளும் நீங்கும்.

விருச்சிகம்
இவ்வளவு காலம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்து வந்த சனி பகவான் இப்போது பத்தாம் வீடாகிய உத்யோக/ தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார். அதன் பலனாக நீங்கள் மேலும் நிறைய உழைக்க வேண்டி வரும். எனினும் குரு பார்வை கிடைக்கப் போவதால் உங்களுடைய உழைப்புக்கெல்லாம் பலன் இருக்கும். சிலர் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். நீங்கள் கவனமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டால் எந்த பிரச்சினையும் வராது. குடும்பத்தினருடனும் அலுவலகத்தில் உள்ளவர்களுடனும் எந்த வகையில் அனுசரித்துப்போகலாம் என்று பாருங்கள். தவறுகளைக் கண்டும் காணாமல் போகப் பழகுங்கள். நீங்கள் தட்டிக் கேட்பதால் யாரும் திருந்தி புத்தராகிவிடப்போவதில்லை. பகைதான் ஏற்படும். பழிவாங்கவும் செய்வார்கள். ஏன் வம்பு? உங்களை பாதிக்கும் விஷயமானால் வீறு கொள்ளாமல் சாந்தமாக சுமுகமாக பிரச்சினையைத் தீர்க்கும் வழியை ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். பணம் நிறைய வரும். அதைப் பற்றிக் கவலையே வேண்டாம். வாழ்க்கை வசதிகள் பெருகும். வீட்டிலும் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். எனினும் செலவுகளும் கட்டுக்கடங்காமல் இருக்கும். குடும்ப சூழலைப் பொருத்த வரை கணவன் மனைவிக்குள்ளும் குழந்தைகள் பெற்றோருக்குள்ளும் அகங்காரம் தலை தூக்காமல் நீயா நானா என்ற போட்டி உணர்வு எதுவும் இல்லாமல் போய்விடுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியிடம் எந்த பிரச்சினையும் வராது- ஆனால் உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடமிருந்து பிரச்சனை கிளம்ப வாய்ப்பிருக்கிறது. அவர்களாக தலை வலி தர மாட்டார்கள். நீங்கள் தலை வலி ஏற்படுத்தினால் சும்மா இருக்காமல் உணர வைத்துவிடுவார்கள். மற்றபடி எல்லா விஷயங்களும் நன்றாக உள்ளன. நவம்பருக்குப் பிறகு மேலும்நன்றாக உள்ளது.

தனுசு
இத்தனை காலம் அஷ்டம சனி என்ற மகத்தான இக்கட்டான கால கட்டத்தில் மாட்டிக் கொண்டு தவித்தீர்கள். உழைத்த உழைப்புக்குப் பாராட்டாவது, பலனாவது, பரிசாவது...ஒன்றையுமே காணோமே என்று ஏங்கிப் போய் வாடிய பயிர்போலத்தலை கவிழ்ந்து இருந்தீர்கள். அட பாராட்டுதான் கிடைக்கவில்லை. திட்டு கிடைக்காமல் இருந்திருக்கலாமே என்று அங்கலாய்த்து ஆதங்கப் பட்டிருப்பீர்கள். எல்லாம் இனிமேல்தான் சரியாகும். ''அட! நீ இப்படியெல்லாம் உழைத்திருக்கிறாயா! நான் இவ்வளவு காலம் கவனிக்கவே இல்லையே!'' என்று மேலதிகாரிநேரடியாக சொல்கிறாரோ இல்லையோ உங்கள் மீது பரிதாபப்பட்டு உங்களுக்கு சம்பளத்தை அதிகரித்தோ அல்லது பதவியை உயர்த்தியோ அல்லது பாராட்டும் செயல்முறைகளை செய்தோ மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார். வாகனம் வைத்திருப்பவர்களுக்கு அதனால் இவ்வளவு காலம் தொல்லைகள் இருந்திருக்கும். செலவுகள் இருந்திருக்கும். அதனால்கூடப் பரவாயில்லை. விபத்துக்கள் நேர்ந்திருக்கலாம். கையிலும் காலிலும் அடி பட்டிருக்கலாம். அவை எல்லாம் ஏற்படுத்திய பாதிப்புகள் முழுமையாக விலகும் காலம் இது. எனினும் வாழ்க்கை வசதிகள் சற்று குறையக்கூடும். வசதிக் குறைவான இடத்துக்கு நீங்கள் குடி புக நேரிடலாம். அலுவலகத்தில் இட மாற்றம் இருக்கலாம். அல்லது வேறு வேலைக்குக்கூட நீங்கள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக இத்தனை காலம் இருந்து வந்த சிரமங்கள் நீங்கி சிறிது சிறிதாக நிம்மதிக் காற்று முகத்தில் பட ஆரம்பிக்கும். பயணங்களின்போது பொருட்களை யாரையும் நம்பி விட வேண்டாம். அலுவலகத்திலும் உங்கள் வேலையை மற்றவர்கள் செய்வதையோ மற்றவர்களை வேலையை நீங்கள் செய்வதையோ தவிர்க்கப் பாருங்கள். தவறு நேர்ந்தால் இருவரும் பொறுப்பேற்க முடியாமல் பிரச்சினையில் கொண்டு விட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வாக்கு வாதத்தைத் தவிர்தால் போதும். இன்னும் சில மாதங்களில் சனிபகவான் இருக்கும் வீட்டுக்கு குரு பார்வை கிடைக்கப் போவதால் எடுத்த காரியங்கள் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் முடியும். இந்த ராசி நேயர்கள் சிவனையும் அனுமனையும் துதித்தால் பிரச்சினையே வராது.

மகரம்
உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டுக்கு வருவதால் அஷ்டம சனி என்று யாராவது மிரட்டினால் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் போய்விடுங்கள். மகர ராசியின் அதிபதியே சனி பகவான்தான். ராசி அதிபதி என்பவர் ஒரு நல்ல தகப்பனைப் போன்றவர். கெடுதலே செய்ய மாட்டார். மகர ராசிக்காரர்களுக்கு சனி எங்கிருந்தாலும் பிரச்சினை எதுவும் 'சனியால்' வராது. அப்படி பிரச்சினை ஏற்பட்டால் அது சனியால் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வியாபாரம் தொழில் சம்பந்தமான சில இன்னல்கள் தீரும். வண்டி ஓட்டும்போது கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனைவியின் உடல் நிலையில் இவ்வளவு காலம் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் விசிறியால் விசிறியவுடன் பறந்தோடும் கொசுக்கள் போல் காணாமல் போய்விடும்.உங்களுடைய இயல்புகளான சோம்பல் மற்றும் நிதானப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் நீங்கள். இப்போது இருக்கும் வேலையை விட்ட விட்டு வேறு வேலை தேடுபவர்கள் அவசரமோ பதற்றமோ இல்லாமல் ஆழமாக யோசித்துத் தீர்மானியுங்கள். அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் யார் பக்கமும் பேசாமல் ஒதுங்கிவிடுவது நல்லது. எங்கும் யாரும் அபிப்ராயம் அல்லது உதவி கேட்டாலன்றி அவற்றை எடுத்து மானாவாரியாக வழங்கி பிறகு அதற்காக வருத்தப்பட வேண்டாம். உங்கள் சூழ்நிலையை மேலும் சற்று அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளப் பழகுங்கள்.

கும்பம்
இத்தனை காலம் உங்கள் நண்பர்கள் என்று உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்கள் தானாக உங்களைவிட்டு விலகுவார்கள். குடும்ப சூழ்நிலையில் குழந்தைகளால் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இனி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். உங்கள் கும்பத்திலேயே ராகு பகவான் அமர்ந்திருப்பதால் ஆரோக்யம் சம்பந்தமான பெரிய பிரச்சினைகளும் செலவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இனி உங்கள் ராசி நாதன் சனியின் பார்வை பட்டு ஆரோக்ய பிரச்சனைகளும் செலவுகளும் கட்டுப் படும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக் குடைச்சல்களும் ஏக்கங்களும் தீரும். அலுவலக விஷயங்களை சீராகவும் சரியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். போட்டுக் குளறுபடி செய்ய வேண்டாம். பிறகு நீங்கள்தான் சிரமப்படவேண்டியிருக்கும். கணவன் மனைவி நல்ல காரணங்களுக்காகப் பிரிய நேரிடலாம். வாக்குவாதம் சண்டை ஆகியவை இல்லாமல் கணவருடன்/ மனைவியுடன் ஒத்துப் போய்விடுவது நல்லது. அகங்காரம் தலை தூக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும். லாபம் கிடைக்கும். கோபதாபங்களால் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமை அவசியம் தேவை. அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்திருந்த நன்மைகளுக்கு சிறிது காலம் காத்திருந்தாலும் அது சற்றுத் தடை பட்டாலும் கட்டாயம் உங்களுக்குக் கிடைக்கும்.சிலருக்கு அதிகமாக உழைக்க வேண்டிய உத்யோகங்கள் கிடைக்கும். சிலருக்கு அதிகமாக உழைக்க வேண்டியபடி பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் ஓரிரு மாதங்கள் பொறுமை காக்க வேண்டும். குறிப்பாக மேலிடத்தைப் பகைத்துக் கொள்ளும்படியான காரியங்கள் செய்ய வேண்டாம். தினமும் காகத்துக்க எள்ளும் தயிரும் சிறிது கலந்த சாதம் வையுங்கள். குடை அல்லது காலணிகள் தானம் செய்யுங்கள். அனுமாருக்கு தீபம் ஏற்றுங்கள். வெண்ணெய் சாற்றுங்கள்.

மீனம்
இவ்வளவு காலமாக உங்களுடைய 5 ம் வீட்டில் இருந்த சனி பகவான் 6 ஆம் வீட்டுக்கு நகர்கிறார். குழந்தைகளால் கஷ்டங்களையும் கவலைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனி குழந்தைகள் பற்றி மகிழ்ச்சியும் நிம்மதியும் மட்டுமின்றிப் பெருமிதமும் ஏற்படும்! அலுவலகத்தில் நிறைய உழைத்து அதிக லாபம் பார்க்காமல் இருந்தீர்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் மட்டுமின்றி உங்கள் வேலையின் நேர்த்தி பற்றி பாராட்டும் காதில் தேனாகப் பாயும். இவ்வளவு காலம் நீங்கள் எவ்வளவுதான் கவனமாக வேலை பார்த்தாலும் சிறிய அல்லது பெரிய தவறுகள் நேர்ந்து அல்லல் படுத்திக் கொண்டிருந்தன. உங்களையும் மீறிய தாமதங்கள் ஏற்பட்டு உங்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இனி பணியில் உங்கள் கவனம் தானாக அதிகரித்து கெட்ட பெயர்கள் நீங்குவதுடன் நற்பெயரும் வாங்கித்தரும். பகைவர்களைத் தவறான பக்கத்தில் சீண்டிப் பார்க்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று போய்க் கொண்டு இருங்கள். எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கவே வாங்காதீர்கள். இவ்வளவு காலம் குழந்தைகளின் முன்னேற்றத்துக்குத் தடைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இனி அவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள். அவர்களின் கல்வி, பதவி ஆகியவற்றில் இருந்து வந்த தடைகள் நீங்கும். இவ்வளவு காலம் குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும். இந்த ராசி நேயர்கள் ஆரோக்யத்தில் அதிக கவனம செலுத்துவது நல்லது. பணப் பிரச்சினைகள் தீர்ந்து நல்ல காரியஙகளுக்கு செலவழிக்கவும் வங்கி சேமிப்பை அதிகரிக்கவும் பணம் குவியும். யாரிடமும் வீண் வாக்குவாதம் வேண்டாம். விநாயகருக்கு பூஜை செய்யுங்கள். துன்பம் நெருங்காது.

Keine Kommentare: